Monday, January 30, 2017

வாழையடி, வாழை!!

வகுப்பு - அறை எண் 15
பாடம் - ஆங்கிலம்
தலைப்பு - கார்டூன் (கேலிச் சித்திரம் அல்ல - சித்திரக் கதை.)
அளவு - நான்கு சட்டங்கள்
இருக்க வேண்டியவை - close shot, long shot. wide shot, onomatopoeia, slang... இப்படியாக ஒரு லிஸ்ட் வெண்பலகையில் எழுதப்பட்டிருந்தது.

என் மாணவருக்கு உதவுவதோடு இடையில் வேறு சிலருக்கும் உதவுவேன். பாடத்தின் இரண்டாவது நாளன்று மற்றவர்கள் என்னதான் வரைகிறார்கள் என்று ஒரு சுற்றுப் போய் சித்திரங்களை எட்டிப் பார்த்தேன்.

இப்படி ஒரு மரம் கண்ணில் பட்டது.

"இது என்ன மரம்?" - நான்
"பனானா மிஸ்." என்றார் மாணவர் நிமிராமல்.
"எங்கே நிற்கிறது இந்த வாழை?"
"அந்தக் குரங்கின் வீட்டில்."
"அதைக் கேட்கவில்லை. இப்படி ஒரு வாழையை எங்கே கண்டீர்கள்?"

சற்று எச்சரிக்கையானார் சின்னவர்.
"Why Miss? Don't they look like all the other trees!!"
என்ன செய்வது!!!
"Shall we google!" என்றேன்.
~~~~~~
இங்கு வாழை ஒரு அழகுத் தாவரம். வெகு சில வீடுகளில் மட்டும் காணலாம். அவையும் உண்ணக் கூடிய கனிகளைக் கொடுப்பதில்லை.


 என் வீட்டிலிருப்பவை பூ & காய்களைச் சமைப்பதற்காகவும் இலைகளுக்காகவும் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் இலைகள் காற்றில் கிழிந்து நார்நார் ஆகிவிடுகின்றன. அல்லது பக்கத்து வீட்டு 'கரக்கா' மரத்து வாசிகள் கழிப்பிடங்கள் ஆகிவிடுகின்றன. ;-(

இவை முற்றும் முன், முன்பனி ஆரம்பித்துவிடும். பஜ்ஜி, கறி, பொரியலுக்குத்தான் ஆகும். பெரும்பாலும் ஒரே நாளில் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கி, பொரித்து ஃப்ரீஸரில் போட்டு வைப்பேன்.